மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2

The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

எழுதியவர் எஸ். நாகராஜன்

25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!

ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய இதிஹாஸமாகும்.

கீதையே என் ஹ்ருதயம்

இதன் உயிர்நாடியான பகவத்கீதை (அர்ஜுனா!கீதை என் ஹ்ருதயம்!கீதையே நான் விரும்பும் சாரம் – மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.

“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்” (பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)

புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.

மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!

நளாயனியே திரௌபதி

நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்

ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.

ஹிரண்யகசிபுவே சிசுபாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன்  சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்டகேதுவாகவும் பிறக்கின்றனர்.அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.

பீஷ்மரே அஷ்டவஸ¤க்களில் கடைசி வஸ¤

அஷ்டவஸ¤க்கள்  வஸிஷ்டருடைய சாபத்தாலும் இந்திரனுடைய கட்டளையினாலும் சந்தனு ராஜாவுக்கு கங்கா தேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர்.அவர்களில் கடைசி வஸ¤வே பீஷ்மர்!ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியர்.துவாபர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!ஸப்த மருத்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே

பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே!ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான்.அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.கலியின் அம்சம் கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர்ஜென்ம விவரங்களை ஆதிபர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கிவிடலாம்!

இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஒன்றான மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

காந்திஜி போற்றிய புனர்ஜென்மக் கொள்கை

இதனாலெல்லாம் கவரப்பட்டுத் தான் மஹாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் மஹாபாரதத்தைப் போற்றியதோடு சுதந்திரம் பெற இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது தவிர பதினெட்டு புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் நம்மை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தும்.அவற்றையும் மஹாத்மா காந்தி டால்ஸ்டாய்க்கு இது பற்றி கடிதம் எழுத நேரிட்ட சம்பவத்தையும் இனி பார்ப்போம்!

************************

Previous Post
Leave a comment

Leave a comment