நிலவைக் கவர்ந்த ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள்

Aldebaran= star Rohini

நட்சத்திர அதிசயங்கள்

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

 

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.

தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

தனது புத்திரிகளின் புலம்பலை மூன்றாவது முறை கேட்ட தட்சன் பெரிதும் வெகுண்டான்.சந்திரனை க்ஷயரோகம் பிடிக்கக் கடவது என்று சாபம் இட்டான். சாபத்தினால் சந்திரன் நாளுக்கு நாள் இளைத்துப் பொலிவை இழக்க ஆரம்பித்தான். சந்திரனே மூலிகைகளின் அதிபதி. அவன் இளைத்ததால் மூலிகைகள் வாடி வதங்க ஆரம்பித்தன.அவைகள் தொடர்ந்து வீரியத்தை இழக்கவே தேவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.சந்திரனை அடைந்து காரணத்தைக் கேட்டனர். சந்திரனும் தட்சனின் சாபம் பற்றிக் கூறினான். தேவர்கள் தட்சனை அடைந்து சந்திரனை மன்னிக்குமாறு வேண்டினர். சிவனின் அருளால் சரஸ்வதி தீர்த்தத்தில் சந்திரன் மூழ்கி எழுந்தால் அவன் க்ஷய ரோகத்திலிருந்து விடுபடுவான் என்று சாப நிவிர்த்திக்கான வழி பிறந்தது. மனம் மகிழ்ந்த சந்திரன் சரஸ்வதி தீர்த்தத்தில் குளித்து வளர ஆரம்பித்தான். மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து        மீதிப் பாதி நாட்கள் வளர்வதுமாக இருக்க ஆரம்பித்தான். அமாவாசையும் பௌர்ணமியும் தோன்றக் காரணமான இந்தக் கதையை விளக்கமாகச் சிவ புராணம் விளக்குகிறது!

 

புராதன நாகரிகங்கள் புகழும் ரோஹிணி

ரோஹிணி என்றால் சிவந்தவள் என்று பொருள். ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதி ரோஹிணி மண்டலம்! அருகே இருக்கும் ஐந்து நட்சத்திரங்களையும் சேர்த்து இதைச் சகடம் எனக் குறிப்பிடுகின்றனர். சிவந்த குதிரை என்று பொருள் படும் லோஹிதாச்வ என்ற பெயராலும் இதைக் குறிப்பிடுவர். அராபிய மொழியில் அல்டிபெரான் என்று இந்த நட்சத்திரத்தை அழைக்கின்றனர். இதற்கு வரிக்குதிரை அல்லது குதிரை என்று பொருள். சந்திரனின் பிறை தரிசனத்தை எப்படி இந்து மதம் வலியுறுத்துகிறதோ அதே போல பிறை தரிசனத்தை இஸ்லாமும் வலியுறுத்துகிறது!

ரோஹிணி நட்சத்திரம் புராதனமான எல்லா நாகரிகங்களாலும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம். சீனர், பாபிலோனியர், எகிப்தியர்,அராபியர், இந்தியர், கிரேக்கர் என அனைவரும் போற்றிய நட்சத்திரம் இது என்பதோடு அனைத்து நாகரிகங்களிலும் இதைப் பற்றிய ஏராளமான கதைகளும் உண்டு என்பது குறிப்பிடத் தகுந்தது. சந்திரன் – ரோஹிணி பற்றி அகநானூறு, மலைபடுகடாம்,நெடுநல்வாடை உள்ளிட்ட ஏராளமான சங்க நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன!

எடுத்துக் காட்டாக ‘அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல’ என இணை பிரியாத காதலர்கள் சந்திரனும் ரோஹிணியும் என்று புகழும் சங்கப் பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டலாம்! தமிழ் ஆர்வலர்கள் நெடுநல்வாடையில் வரும் 159 முதல் 163 வரிகள் சுட்டிக்காட்டும் ‘உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா’ உள்ளிட்ட பல பாடல் வரிகளைப் படித்து மகிழலாம்.

மஹாபாரதக் கதை

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஜாபதி, மஹாபாரதத்தில் வன பர்வத்தில் வரும் ஒரு முக்கியக் கதை ரோஹிணியைப் பற்றி விளக்குகிறது.

அனைவரது பார்வையிலிருந்து  சில காலம் ரோஹிணி மறைந்து விட்டாள் என்றும் ரோஹிணி மேலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்றும் பிறகு சிறிது காலம் கழித்து ரோஹிணி தன் இடத்தை மீண்டும் பிடித்தாள் என்றும் கதை கூறுகிறது.  இந்தக் கதை கூறும் மர்மத்தைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்

-தொடரும்

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S. Nagarajan எழுதிய அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.

 

Previous Post
Leave a comment

Leave a comment