மணிபத்ரா
Written by London Swaminathan
Date: 5 JUNE 2018
Time uploaded in London – 19-31
Post No. 5079
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களில் தனித்து நிற்பது ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும்; அதன் தொடர்கதை மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளதால் அவைகளை இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர் தமிழர்.
யார் இந்த மணிமேகலை?
மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்று பெயர்; மாதவி , மணிமேகலை என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். மணிமேகலை என்பது கடல் வணிகரின் பாதுகாப்புத் தெய்வம் ஆகும். இந்த தெய்வம் தென் இந்திய வணிகர்களின் பெண் தெய்வம். வடக்கிலுள்ள வணிகர்கள் மணிபத்ரா என்ற யக்ஷனை இது போலப் பயணிகளின் தெய்வமாகக் கருதினர். 2300 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் மணிபத்ரா, மணிமேகலை போன்ற தெய்வங்களின் கதைகள் வருகின்றன. புத்த மதத்தினர் ராமாயண, மஹாபாரத, பஞ்ச தந்திர, ஹிதோபதேச மற்றும் நாட்டுப்புற கதைகளை எல்லாம் புத்தர் பெயரில் ஏற்றி பௌத்த ஜாதகக் கதைகள் என்று பாலி மொழியில் எழுதி வைத்தனர். இதுவும் நன் மையில் முடிந்தது. ஸமுத்ர வாணிஜ (வணிகர்) கதை, மஹா ஜனக கதை முதலியன மூலம் அக்கால கடல் வணிகத்தை நாம் அறிய முடிகிறது.
மஹா ஜனக ஜாதகத்தில் ஒரு உரையாடல் வருகிறது:–
மஹா ஜனகன் என்பவன் சென்ற கப்பல் உடைந்து போய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மூச்சு இளைக்க நீந்திக் கொண்டிருந்தான்.
அப்பொழுது மணிமேகாலா தேவி அவனைப் பார்த்தாள்; இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:—
மணிமேகலை:-
யாரையா நீ? இந்தப் பரந்த பெருங்கடலில் பயனின்றி கைகளை அடித்துகொண்டு தப்பிக்கலாம் என்ற நப்பாசையுடன் போகிறாயே நீ யார்? யாரை நம்பி இப்படி உயிர் பிழைக்கலாமென்ற நம்பிக்கையுடன் போகிறாய்?
மஹா ஜனகன்:
ஓ, தேவதையே! எவன் ஒருவன் ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்வது அல்லவோ கடமை; எனக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரை தென் படவில்லை என்பது உண்மைதான்; ஆயினும் கரையை அடைய என் பயணத்தைத் தொடர்வேன்.
மணிமேகலை:-
கடலில் உன் தைரியத்தைக் காட்டுவதில் பயன் ஒன்றும் இல்லை, அன்பனே! கரையை அடைவதற்கு முன்பே நீ அழியப் போகிறாயே!
மஹா ஜனகன்:
ஓ கடவுளே! நீ இப்படிச் சொல்லலாமா? நான் அழிந்தாலும் கூட எனக்கு ஏற்படக்கூடிய அவப் பெயரை நான் தவிர்க்கலாமே. என்னைப் போல முயற்சி செய்பவன், பின்னர் வருத்தப்படுவதற்கு எதுவும் இராது.
மணிமேகலை:-
வெற்றி பெறாத முயற்சியில் என்ன பலன்? அதுவும் வெற்றி என்பது கண்ணுக்கு எட்டிய தொலைவில் காணவில்லையே! மரணம் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் என்ன பயன்?
மஹா ஜனகன்:
பார்! என் தோழர்கள் அனைவரும் மூழ்கி இறந்து விட்டனர்; ஆயினும் நான் மட்டும் நீந்துகிறேன் பார்; என் உடலில் சக்தி உள்ள வரை நான் நீந்துவேன். நான் கடலைக் கடக்க முயற்சி செய்வேன்.”
மணிமேகலையின் கோவில் காவேரி முகத்வாரத்தில் இருந்தது. குமரி முதல் கடாரம் வரை அவள் வணங்கப்பட்டாள்.
இந்த உரையாடலானது, அந்தக் கால மாலுமிகளின் நம்பிக்கையையும், விடா முயற்சியையும், நற் பெயர் எடுக்க வேண்டும் என்ற பேரவாவையும் காட்டுகிறது
வடக்கில் மணிபத்ரா என்ற யக்ஷ்னை இதே போல வணிகர்கள் வழிபடுவர். மதுரா முதலிய இடங்களில் அவாது சிலைகளும் கோவில்களும் இருந்தன. இப்பொழுது மிகப்பெரிய மணிபத்ரா சிலை மதுரா ஜில்லாவில் (உ.பி) இருக்கிறது. குவாலியர் பகுதியில் ஒரு காலத்தில் பெரிய அளவில் மணிபத்ரா வழிபாடு நடந்து வந்தது.
ஸமுத்ர வணிக ஜாதகத்தில் உள்ள ஒரு கதையும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் பயணம் என்பது எவ்வளவு சர்வ சாதாரணமாக இருந்தது என்பதைக் காட்டுகிறது.
இதோ அந்தக் கதை:
ஒரு நகரத்தில் தச்சர்கள் அனைவரும் சேர்ந்து மரச்சாமான்கள் செய்து விற்பதற்காக கடன் வாங்கினர். ஆனால் அவர்கள் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேறவில்லை; கடன் கொடுத்தவர்களோ நச்சரிக்கத் துவங்கினர். தச்சர்கள் அனைவரும் ஒரு திட்டம் போட்டனர்; நாம் எல்லோரும் ஒரு கப்பல் செய்வோம்; திரை கடல் ஓடித் திரவியம் கொணர்வோம் என்றனர். அந்த திட்டப்படியே ஒரு நாள் கப்பலில் புறப்பட்டனர். அவர்களுடைய அதிர்ஷ்டம் காற்றும் கடலும் அவர்களுக்கு உறுதுணையாக நின்றன. ஒரு அழகான தீவுக்குச் சென்றனர். தென்னை மரங்களும் பழ மரங்களும் காய்த்துத் தொங்கின. அங்கு இவர்களுக்கு முன்னமே வேறு ஒருவன் உடைந்த கப்பலில் இருந்து அங்கு நீந்தி வந்து வசித்தான்; இவர்களைப் பார்த்தவுடன்
“ஆஹா, என்ன ஆனந்தம்
உழைக்காமலேயே வாழும் இடம் இதுதான்.
நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் இங்கு வர வேண்டாம். எனது தாய்நாட்டைவிட இதுதான் இன்பம் தருகிறது”.
இந்தப் பாடல் கிரேக்க புலவன் ஹோமர் எழுதிய ஆடிஸி காவியத்தில் வரும் மாயா லோக மனிதர்கள் போல இருக்கிறது. அவர்கள் தேன் குடித்து உயிர் வாழ்ந்தனர்; ஆடிஸியஸை அழைத்த போது அந்த சோம்பேறித் தனமான சுக போகம் வேண் டாம் என்றும் வீர தீரச் செயல் செய்யவே விருப்பம் என்றும் பதில் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். அதை நினைவு படுத்துகிறது இந்த ஜாதக் கதை.
ஆகவே பழங்கால வணிகரின் வாழ்க்கையை அறிய இந்த ஜாதக் கதைகளும் ஏனைய நூல்களும் உதவுகின்றன; கடற்பயணம் என்பதும் கனவுலகம் போன்ற வெளிநாடுகளும் எல்லோரும் அறிந்த விஷய மாக இருந்தது.
-சுபம்–
You must be logged in to post a comment.